Wednesday, September 25, 2019

யாவும் சமீபித்திருக்கிறது- கடங்கநேரியான்

யாவும் சமீபித்திருக்கிறது- கடங்கநேரியான்.

வாழ்வின் அலைக்கழிவுகள், நிலத்தின் மீதான பற்றுதல், சாவின் மீதான இளக்காரம், தனித்திருப்பவனின் மன வேட்கைகள் என தத்துவார்த்தமான எளிய நடையில் கவிதைகளை யாத்திருக்கிறார் என்பதனைக் காட்டிலும் கவிதைகள் அவரை ஆட்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு கவிதையையும் வாசித்து முடித்ததும் அங்கிருந்து புதியதொரு கவிதை வாசிப்பவர் உள்ளத்தில் ஊற்றெடுப்பதை உணரலாம். தத்துவ விசாரங்களைத் தாண்டி எதார்த்த வாழ்வினை அத்தனை கவிதைகளும் வாசிப்பவர் நெஞ்சுக்கு எடுத்துச் செல்கின்றன. இழந்துவிட்ட வாழ்வினை மூளை தேடிக்கொண்டிருக்கக்கூடும் நினைவுகளில்.

இன்றைய அதிகார வர்க்கங்கள் ஆட்டுவிக்கும் நிலையில் ஒரு மந்தியென ஆட மறுப்பவர்கள் தம் ஆதிமிருகத்தை கண்டடைவர்.

"மரண மாலை" ல் உள்ள குறுங்கவிதைகளை வாசித்தால் அதிகாரத்தின் போதையில் ஆடுபவர்கள், பணம், பதவி போகம் என சம்போசித்திருப்வர்கள் பற்றற்று போகும் சாத்தியக்கூறுகள் கவிதையை உள்ளார்ந்து ஏற்பதில் இருக்கிறது.

"எழுத்தாளர்கள்" கவிதையில் தமிழ் எழுத்துலகை பீடித்திருக்கும் யார் ஆகச் சிறந்தவர் என்ற கேள்வியை எழுப்புகிறது. நாளை மற்றொரு நாளே என இலக்கிய குழுவாத சச்சரவுகளில் காயக் கட்டுகளோடு மருத்துவமனையில் கண்ணயரும் எழுத்தாளன் வேறு யாருமல்ல கடங்கநேரியானே. அவ்வளவு பகடியும், வேதனைகளும் நிறைந்திருக்கின்றன அக்கவிதைகளில்.

எப்போதும் வென்றவர்களே வரலாற்றை எழுதுகின்றனர் என்பார்கள். வென்றவர்கள் கூறும் வரலாற்றைக் காட்டிலும் தோற்றவர்கள் கூறும் வரலாறு அதிக அழுத்தம் மிகுதியானது. இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் உலக வல்லரசுக்களின் பொருளாதார சந்தைக்கும், சுரண்டலுக்கும் தடையாக இருப்பார்கள் என்ற காரணத்தால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழத்தின் போராட்ட வரலாறு "மாவீரன்" கவிதையில் உள்ளவாறுதான் சமகாலத்தில் பார்க்கப்படுகிறது.

புலம்பெயர் நிலத்தில் மனப்பிறழ்வுகளை உருவாக்கும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் "யாவும் சமீபித்திருக்கிறது"  வாசிப்பு எனக்கு தப்பித்தலைத் தருகிறது. 

சுகன்யா ஞானசூரி
25/09/2019.

No comments:

Post a Comment