Monday, February 19, 2018

தஞ்சை நாடோடிக் கதைகள்-தஞ்சை பிரகாஷ்

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:4
தஞ்சை நாடோடிக் கதைகள்- சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்: தொகுப்பு(தஞ்சை பிரகாஷ்)
மொத்தப் பக்கம்: 120
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ₹100
தஞ்சை என்றதும் எனது முதுகலை அறிவியல் படிப்பு நாட்களே(2006-2008)நினைவில் எழுகின்றன. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு எதிரே இருக்கும் அக்ரஹாரத் தெருவில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள சிறிய அறையில்தான் நானும் நண்பர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் போன்றவர்களோடு இருந்தேன். நண்பர்கள் வீடு செல்லும் விடுமுறை நாட்களின் தனிமை பல நேரங்களில் என்னை அச்சுறுத்தும். அவ்வளவு அமைதியான இடம். அந்த அச்சுறுதலில் இருந்து என்னை தற்காத்துக்கொள்ள இரவு பகல் பாராமல் பெரியகோவில், சிவகங்கை பூங்கா, சரசுவதி மஹால், அரண்மனை, மணிமண்டபம், குமரன், ஜூபிடர் திரையரங்கம், நகர்மன்ற நிகழ்வுகள், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என நடந்தே திரிந்தேன். இப்படியாகத்தான் நான் தஞ்சையை தெரிந்துகொண்டேன்.

தஞ்சை நாடோடிக் கதைகள் என்றதும் பெயருக்காகவே இந்த நூலை வாங்கியிருந்தேன். தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எழுதியவர்களின் சிறுகதைகளை தேடித் தேடி சேகரம் செய்து தொகுத்துள்ளார் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் அவர்கள். மொத்தம் 22 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. சில கதைகளை எழுதியவர் விபரம் கிடைக்கவில்லை. ஒரு ஊரில் என்று கதை சொல்லும் பாட்டி கதைகளை ஒத்து இருக்கிறது அத்தனை கதைகளும். சிறுவர்களுக்கும் இந்த கதைகளை பரிந்துரை செய்யலாம். அவ்வளவு அற்புதமான நாடோடிக் கதைகள். இந்த கதைகளை எழுதியவர்கள் இன்னும் எழுத்துகிறார்களா எனும் ஆவல் எழுவது இயல்பு.

ஒவ்வொரு கதையிலும் தஞ்சையின் மண் வாசமும், எள்ளலும் கூடவே பயணிக்கிறது. 22 கதைகளும் ஒரே ஆள் எழுதியது போன்ற நேர்த்தி குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கதைகள் அந்த ஊரின் அத்தனை விழுமியங்களை கால காலத்திற்கும் கடத்திச் செல்லும் ஒரு நினைவுப் பேழை. ஆவணக் குறிப்புகள். நெல்லின் வாசமும் காவிரியின் ஈரமும் நிறைந்த தஞ்சை இன்று மாநகர வெக்கையில் வெந்து தவிக்கிறது.

- சுகன்யா ஞானசூரி.

4 comments:

  1. தஞ்சை பிரகாஷ் எனக்குப் பிடித்த எழுத்தாளர். சிறப்பான விமரிசனம். படிக்க எண்ணியுள்ளேன்.

    ReplyDelete
  2. அன்பும் நன்றிகளும் அய்யா தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  3. நல்லதோர் அறிமுகம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றிகளும் ஐயா தங்கள் வருகைக்கு...

      Delete