Sunday, February 18, 2018

உறுபசி-எஸ்.ராமகிருஷ்ணன்

புதுக்கோட்டையில் 2015ல் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் நிகழ்வில்தான் நான் முதன்முதலாக எஸ்.ராவை சந்தித்தேன். அவரது பேச்சினை கேட்டேன். அந்தப் பேச்சில் வசியப்பட்டுப் போனேன் என்பதே உண்மை. அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரை வாசித்தாலும் முழுமையாக வாசிக்கவில்லை. அப்படி வாசிக்கப் பிரியப்பட்டு வாங்கியதுதான் உறுபசி எனும் நாவல். 

சம்பத் எனும் நண்பனின் மரணம் அவனது நண்பர்கள் துரை, ராமதுரை, மாரியப்பன் மற்றும் கதைசொல்லி ஆகியோரது மன வெளிகளில் பயணிக்கிறது கதை. எடுத்த எடுப்பிலேயே எவ்வித வர்ணனையும் இன்றி எளிமையாக கதையை துவக்கிவிடுகிறார். இது வாசிப்பாளனுக்கு சலிப்பினை ஏற்படுத்தாது வாசிக்கத் தூண்டுகிறது.

கானல் காடு நோக்கிச் செல்லும் நண்பர்களின் பயணம் சம்பத் எனும் நண்பனின் இறப்பின் வலிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான, மனதை ஆசுவாசப்படுத்துவதற்கான உத்தி. நான் எனும் அந்த கதாபாத்திரம் வாசிக்கும் நீங்களாகக்கூட இருக்கலாம். வாசித்து முடிக்கும்போது எனக்கு அந்த நான் பாத்திரம் நானாகவே தெரிந்தது.

சம்பத் எனும் மனிதன் தான்தோன்றித் தனமாக, மது மாது சகவாசங்களில் ஊறித் திளைத்தவனாக, நிலையற்ற மனம் கொண்டவனாக வாழ்த்திருக்கிறான். அவன் அப்படியாக மாறுவதற்கு அவனது குடும்பமும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறார்கள். கானல்காட்டில் நண்பர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் சம்பத்தின் நினைவுகள் எழுவதைக்கொண்டு கதையை தொய்வின்றி நகர்தியிருக்கிறார். சம்பத் தனக்கான வாழ்வை யாருடைய சமரசத்துக்கும் இடமின்றி சுதந்திரமாக வாழ்த்திருக்கிறான். ஏனெனில் அவன் அவனாகவே இருந்திருக்கிறான்.

கானல்காட்டை விட்டு கீழ் இறங்கும் நண்பர்கள் சமூக வாழ்வில் தாம் பொருந்திக் கொள்ளாமல் போயின் இன்னும் இன்னுமென சம்பத்தின் நினைவுகளால் அலைக்கழிக்கப் படுவோம் எனக் கூறுவதும், மலையை திரும்பிப் பார்க்கையில் அங்குமட்டும் மழை பெய்வதாக முடிகிறது.

தமிழில் இப்படி உளவியல் ரீதியாக தத்துவார்த்த அடிப்படையில் அமைந்த நாவல் என்றால் மிகையல்ல. மரணம் ஏற்படுத்தும் பயமும், வாழ்தலுக்கான கட்டாயமும் உந்தித்தள்ளும் இந்த நவீன காலத்தில் இவர்களைப் போன்ற நண்பர்கள் ஏராளமாய் இருந்து வருகிறார்கள் என்பதே எதார்த்தம்.

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:3
உறுபசி-நாவல்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
மொத்தப் பக்கம்: 136
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ₹115.
-சுகன்யா ஞானசூரி(NV 104)


4 comments:

  1. நல்லதொரு அறிமுகம். இதுவரை படித்ததில்லை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாசித்துப் பாருங்கள். அற்புதமான நாவல். அன்பும் நன்றிகளும் தங்கள் வருகைக்கு.

      Delete
  2. எஸ்.இரா நாவல் என்றால் கேட்க வேண்டுமா? உறுபசி சிறப்பான அறிமுகம். வாசிக்க விருப்பம்.

    ReplyDelete